Wednesday, January 2, 2013

துலாம் ராசிபலன் - 2013

துலாம்:"துலாத்தான் எங்கும் உண்டு" என்பதற்கேற்ப எல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடும் துலா இராசி வாசகர்களே!
நீங்கள் தோல்வியைக்கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி காண வேண்டும் என்று விரும்புபவர். உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது இந்த 2013ம் வருஷம் ?

கிரகநிலை:
இந்த 2013ம் புத்தாண்டில் உங்கள் ராசியில் சனி, ராகு, கேது உங்கள் களத்திரராசியிலும், குரு மே மாதம் 26-ம் தேதிவரை அஷ்டமஸ்தானத்திலும், மே மாதம் 27-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு பாக்கியஸ்தான 9-ம் இடத்திலும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.
இந்த ஆண்டில் உங்களின் அஷ்டம ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானால் திட சிந்தனைகளுடன் உங்கள் குறிக்கோள்களை அடைவீர்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கு நல்ல பல வழிகள் உதயமாகும். நிதி நெருக்கடிகள் ஏற்படாது. குடும்பத்திலும் வெளி வட்டாரத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். எப்போதும் போல் சட்டத்தை மதித்து நடப்பீர்கள். இத்தன்மை, சில அன்பர்களுக்கு சாதகமான மேலிடத்துத் தொடர்புகளை உருவாக்கித் தரும்.
இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீங்கள் சார்ந்துள்ள துறையில் புகழின் உச்சியை நோக்கிப் படிப்படியாக முன்னேறுவீர்கள். அதேசமயம் கடினமாக உழைக்க வேண்டிய ஆண்டாக இது அமைகிறது. நண்பர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். உடலில் இருந்த நோய்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
இந்த ஆண்டு உங்களின் ராசியில் சனியுடன் சஞ்சரிக்கும் ராகு பகவானால் எதையும் சிந்தித்து செயல்படுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்முறைகளை மாற்றிக் கொண்டு நன்மைகளைக் காண்பீர்கள். பந்தயங்கள், போட்டிகளிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். ஸ்பெகுலேஷன் போன்ற துறைகளின் மூலம் நல்ல வருமானம் வர, பிரகாசமான வாய்ப்புகள் தென்படுகின்றன. பெற்றோர் வழியில் நிலவி வந்த மனக் கஷ்டங்கள் தீர்ந்து, குடும்பத்தில் குதூகலம் நிறையும்.
உங்களின் சப்தம ராசியில் சஞ்சரிக்கும் கேது பகவானால் நீங்கள் பல தரப்பட்ட மனிதர்களையும் சந்திப்பீர்கள். இதன் மூலம் நீங்களும் பிரபலம் ஆவீர்கள். உங்களை நாடி வந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அதேசமயம் உங்களின் பொருளாதாரத் திட்டங்களில் சிறிது தொய்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சில நேரங்களில் மனம் நொந்து போவீர்கள். இருப்பினும் பொருளாதார வீழ்ச்சி என்பது இல்லை.
இந்த ஆண்டு ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானால் வாகனங்களுக்கு சிறிது பராமரிப்பு செலவுகள் செய்ய நேரிடும். உங்களின் நண்பர்கள், உங்களுக்குத் தேவையானவற்றைத் தவிர்த்துத் தேவையற்ற விஷயங்களைப் பேச நேரிடலாம். அதனால் எவரையும் முன்னுதாரணமாகக் கொள்ளாமல், உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்திச் செயலாற்றுங்கள். உங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவார். தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுவீர்கள். அதனால் சிற்சில ஆதாயங்களும் ஏற்படும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். இச்சமயங்களில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். எதிர்பாராத பதவி உயர்வால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போவீர்கள்.
வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.
விவசாயிகளுக்குக் கொள்முதல் லாபம் குறைவாகவே இருக்கும். செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் வருமான இழப்பை ஈடு செய்யவும். மேலும் இக்காலத்தில் நீர் வரத்தும் குறைவாக இருக்கும். அதனால் பாசன வசதிகளுக்காக, சேமிப்பைக் கரைக்க நேரிடும்.
அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு, உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். அவற்றை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்கான உங்களின் முயற்சிகளை எதிர்கட்சியினரும் பாராட்டுவார்கள். புதிய பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பண வரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாகவே இருக்கும். உங்கள் திறமையினால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ராசியில் அமர்ந்துள்ள உச்சம் பெற்ற புத்தி ஸ்தானாதிபதியாகிய சனி பகவானால் உங்களின் கற்பனை சக்தி ஊற்றுபோல் பெருகும். இது வருமானமாகவும் மாறி பயன் தரும். உங்கள் செயல்களில் தனித் திறமையை வெளிப்படுத்தும் ஆண்டாக இது அமைகிறது. இதை முழுமையாகப் பயன்படுத்தி வெற்றி காணுங்கள்.
பெண்மணிகளுக்குக் கணவரின் அன்பும், பாசமும் அளவுக்கதிகமாகவே கிடைக்கும். ஆன்மீகச் சுற்றுலாவும், இன்பச் சுற்றுலாவும் சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். பிள்ளைகளாலும் சந்தோஷம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். உழைப்பு குறைந்தால் உயர்வும் குறையக்கூடும். ஆனால் பெற்றோர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். வெளி விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள்.
பரிகாரம் :
முருகப் பெருமானை வழிபட்டு வரவும். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நலம் தரும். இயன்றவர்கள், "அறுபடை வீடுகள்' அனைத்தையுமே தரிசிக்கலாம். இல்லையேல் இயன்ற அளவு ஓரிரு தலங்களுக்காவது சென்று வரவும். அதுவும் முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்தில் முருகப் பெருமானை தரிசித்து உய்வு பெறலாம்.
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

No comments: