Wednesday, January 2, 2013

கடகம் ராசிபலன் - 2013

கடகம்:"Cancer is Sensitive" என்பதற்கேற்ப எதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் ஈடுபடும் கடக இராசி வாசகர்களே!
எளிதில் உணர்ச்சிவசப்படுபவ்ர் நீங்கள். உங்கள் கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நீங்கள். கொஞ்சம் சந்தேகப்புத்தி(Detective Mind) உடையவர்கள் நீங்கள். எப்படி இருக்கப் போகிறது இந்த 2013ம் ஆண்டு?

கிரகநிலை:
இந்த 2013ம் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு சுகஸ்தான 4-ம் இடத்திலும் ராகுவும், சனியும், கேது உங்கள் கர்மஜீவனஸ்தான 10ம்ராசியிலும், குரு மே மாதம் 26-ம் தேதிவரை லாபஸ்தான 11ம்ராசியிலும் மே மாதம் 27-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு அயனசயன விரைய ஸ்தானமான 12-ம் இடத்திலும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.
இந்த ஆண்டு, உங்களின் லாபஸ்தான ராசியிலும் விரையஸ்தான ராசியிலும் சஞ்சரிக்கிறார் குரு பகவான். இவர் செல்வச் செழிப்போடு செல்வாக்கையும் உங்களுக்கு அள்ளித் தருவார். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சொத்து விவகாரங்களில் நிலவிய வில்லங்கம் விலகும். சமுதாயத்தில் உயர்ந்த பதவிகளையும் பெறுவீர்கள்.
லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், உங்களை மூத்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து செயல்பட வைப்பார். சிறிய முதலீட்டிலும் பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள். ஆதாயம் தரும் தொழில்களைத் தொடங்குவீர்கள். தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு, பலருக்குக் கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்படாது.
இந்த ஆண்டு உங்களின் சுகஸ்தான ராசியில் சனியுடன் ராகு பகவான் சஞ்சரிப்பதால், உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகள் பளிச்சிடும். குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பீர்கள். அதேநேரம் அவர்களின் மகிழ்ச்சிக்காக சுற்றுலாவும் சென்று வருவீர்கள். பதற்றப்படாமல் உங்கள் செயல்களை செய்து முடிப்பீர்கள்.
ஒரு விஷயத்தில் கவனம் தேவை! உங்களின் நெருங்கிய நண்பர்களே உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம். இதனால் மனதில் குழப்பங்கள் சூழும். இதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களின் கருத்துக்களை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவற்றை எச்சரிக்கை உணர்வுடன் வெளிப்படுத்துங்கள். மற்றபடி கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். வருமானம் சீராக இருப்பதால் கடன்கள் ஏற்படாது. செய்தொழிலில் ஏற்படும் போட்டிகளை சாதுர்யத்துடன் எதிர் கொள்வீர்கள். தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். அதனால் அனாவசிய செலவுகளைத் தவிர்த்து, முக்கியமான செலவுகளை மட்டுமே செய்யவும்.
குரு பகவானின் கனிந்த பார்வை கிடைக்கப்பெறும் தைரியவீர்ய ஸ்தானத்தால் உங்களின் நடை, உடை, பாவனைகளில் அழகை உண்டாக்குவார். சிலருக்கு நூதன வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத பயணங்களால் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உத்யோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு. அதேசமயம் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். இதனால் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சில காலம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகத்திலிருந்து கடன் கிடைத்து வாகனம் வாங்கும் யோகமும் பலருக்கு அமையும்.
வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனாலும் எதிலும் கவனமாக இருக்கவும். புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே வாங்கி விற்கவும். அதேசமயம் சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபமடைய நிறையவே வாய்ப்புகள் உள்ளன.
விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வங்கிக் கடன்களும் கிடைக்கும். அதேநேரம் கால்நடைகளுக்கு சற்று கூடுதலாக செலவு செய்ய நேரிடும். மற்றபடி புழு, பூச்சிகளால் பயிர்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாது. நீராதாரங்களையும் பெருக்கிக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும். உங்களின் மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அதேசமயம் கட்சியில் முக்கியப் பிரமுகர் யாரிடமாவது மனக்கசப்பு ஏற்படலாம். அதனால் பிறருடன் பேசும்போது ஒரு முறைக்கு இரு முறை யோசித்துப் பேசவும்.
கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். அதேநேரம் சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் காரியங்களைச் செய்யவும்.
பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற கவலைகள் சிலருக்குத் தோன்றலாம். மனதைக் கட்டுப்படுத்த யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்தால், கவலைகள் தேவையற்றவை என்பது தன்னால் புரியும்.
மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகி உங்களின் முன்னேற்றத்திற்கு அடி கோலுங்கள். "உங்களை நீங்கள்தான் உயர்த்திக் கொள்ள வேண்டும்'' என்கிற கீதை வாக்கியத்தை மறவாமல் நடைபோடுங்கள்.
பரிகாரம் : முடிந்தால் திங்களூர் சென்று தரிசனம் செய்து விட்டு வரவும்.
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

No comments: