Wednesday, January 2, 2013

சிம்மம் ராசிபலன் - 2013

சிம்மம்: "ஸிம்ஹத்தானோடு சிணுங்கேல்" என்பதற்கேற்ப உங்களிடம் யாராவது வம்பிழுத்தால் அவ்வளவுதான், உடனே சிங்கம் பிடரியை சிலுப்பி எழும்புவது போல எழுந்து விடுவீர்கள்.
முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள். உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது இந்த 2013ம் ஆண்டு?

கிரகநிலை:
இந்த 2013ம் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு சனி, ராகு 3-ம் இடத்திலும் கேது உங்கள் பாக்கியஸ்தான 9ம் ராசியிலும், குரு மே மாதம் 26-ம் தேதிவரை கர்மஜீவனஸ்தான ராசியிலும், மே மாதம் 27-ம் தேதி முதல் உங்கள் லாபஸ்தானராசிக்கும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.
இந்த ஆண்டு குரு பகவான் உங்களின் தொழில் ஸ்தான ராசியிலும் லாபஸ்தானத்திலும் சஞ்சரிப்பது சிறப்பு. இதுவரை இருந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். புத்திரர்களாலும், பேரப் பிள்ளைகளாலும் மகிழ்ச்சி ஏற்படும். உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடி வரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். செய்தொழிலை விரிவுபடுத்த பெரிய அளவில் கடன் வாங்குவீர்கள். அதேநேரம் அனைத்து விவரங்களையும் நன்றாகப் புரிந்து கொண்ட பிறகே ஆவணங்களில் கையொப்பமிடவும். மன அழுத்தம் குறைந்து தெளிவாகச் சிந்திக்கும் காலமிது என்பதால் உங்களுடைய உள்ளம் தெளிவான வழிகளிலேயே இட்டுச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். வம்பு, வழக்குகளிலிருந்தும் விடுபட்டு புதிய மனிதனாக ஆவீர்கள்.
ஆன்மீகத்தில் புதிய விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தர்ம காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருப்பதால் புதிய வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். உங்கள் தைரிய ஸ்தானத்தில் சனியுடன் அமர்ந்த ராகு பகவான், உங்கள் சகோதர வழியில் சில அனுகூலங்களை உண்டாக்குவார். நண்பர்களிடம் மன உறுதியுடன் தெளிவாகப் பேசுவீர்கள். உங்களைப் பற்றிப் புறம் பேசும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து நாசூக்காக விலகி விடுவீர்கள். கையிருப்புப் பொருட்களையும், பணத்தையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். மேலும் குறுக்கு வழியில் எந்தச் செயலையும் செய்ய நினைக்க வேண்டாம்.
இந்த ஆண்டு பாக்கியஸ்தான ராசியில் கேது பகவான் சஞ்சரிப்பதால் உறுதியான எண்ணத்துடன் பணியாற்றுவீர்கள். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் நன்றாகவே முன்னேறுவீர்கள். சிலருக்கு நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் சூழ்ச்சிகளில் சிக்கும் சூழல் ஏற்படலாம். ஆனாலும் முருகக் கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டு விடுவீர்கள். அரசாங்கம் வாயிலாக சிறு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அவை விரைவில் மறைந்துவிடும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். இக்காலகட்டம், உங்களை கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க வைப்பார் சனி பகவான். நெடு நாளைய பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். நிலையான புகழும், பெருமையும் அடைவீர்கள். இதனால் நீங்கள் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். உங்கள் மன வலிமை அதிகரிக்கும். உங்கள் செயல்களில் சுறுசுறுப்பு கூடும். உங்களை நீங்களே அறிந்து கொண்டு சமுதாயத்திற்குப் பயன்படுவீர்கள். தெய்வ வழிபாட்டிற்குத் தக்க பலன் கிடைக்கும்.
உங்களின் காரியங்களைப் பொறுமையாகவும், அமைதியாகவும் செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்தைப் பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கத் தொடங்கும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை ஏற்படாது. சக ஊழியர்கள் உங்களிடம் பொறாமை கொள்ளலாம். எடுத்த காரியங்களில், சில சந்தர்பங்களில் கால தாமதம் ஏற்படலாம்; உடலில் சோர்வும், மனதில் தெளிவின்மையும்கூட உண்டாகலாம். ஆனால் இவற்றை மீறி கர்ம ஸ்தானத்தில் உள்ள கேது பகவான், உங்களுக்கு கெளரவமான பதவிகளை வழங்குவார். இதனால் உங்களுக்கு உறுதுணையாக இருந்து வந்த மேலதிகாரிகளின் ஆதரவு சற்று குறையக் கூடும். உங்களின் கடமைகளை பதற்றப்படாமலும், நிதானத்துடனும் செய்தால் எந்தச் சரிவுக்கும் ஆளாகாமல் தப்பிக்கலாம்.
வியாபாரிகள் நல்ல பொருளாதார வளத்தைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை உண்டாகும். வங்கிக் கடன்கள் சிக்கலின்றி கிடைக்கும். உங்கள் முயற்சியில் சுறுசுறுப்பு உண்டாகும். வாணிப வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபத்தைக் காண்பீர்கள்.
விவசாயிகள் விளை பொருட்களால் லாபத்தை அள்ளுவீர்கள். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். அதேசமயம் வயல் வரப்புச் சண்டைகளில் ஈடுபட வேண்டாம். தன்னலம் பாராட்டாமல் அடுத்தவர்கள் வளம் பெற செயலாற்றுங்கள். இந்த ஆண்டு சக விவசாயிகள் மத்தியில் "முக்கியஸ்தர்' என்ற செல்வாக்குடன் வலம் வர வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். பண வரவும் நன்றாகவே இருக்கும்.
கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உழைப்பை அதிகப்படுத்திக்கொண்டு, கர்வத்தை விட்டொழித்துத் திறந்த மனதுடன் இயங்கினால் புகழ் பெறலாம். மற்றபடி சக கலைஞர்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் சில முடிவுக்கு வரும்.
பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தை குடும்பத்தினர் புகழ்வார்கள். புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். விருந்து மற்றும் விழாக்களில் கலந்துகொண்டு உற்காசம் அடைவீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.
மாணவமணிகள் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்டுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும். வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.
பரிகாரம் : தினமும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்து வரவும்.
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

No comments: