Saturday, December 28, 2013

2014ம் ஆண்டு ஒலி வடிவில்

2014ம் ஆண்டு - புதுமையான விரிவான அலசல்

உங்கள் ராசிக்கு MP3 வடிவில்..




விரைவில்....

Sunday, December 22, 2013

இன்று ஒருவருடைய கமெண்ட்:

இன்று ஒருவருடைய கமெண்ட்:



 

அவரு?: அட என்னங்க நீங்க MCAல்லாம் படிச்சுட்டு ஜோதிடம்தான் பாத்துக்கிட்டு இருக்கீங்களா?

நாம்: அதென்ன ஜோதிடம்தான் பாத்துக்கிட்டு இருக்கீங்களா, ஏன் அதுக்கென்ன இப்ப?

அவரு?: (கேவலமாக சிரித்துக் கொண்டு) இல்லை சும்மா கேட்டேன்.

நாம்: (சிரித்துக் கொண்டே) 25 வருஷத்துக்கு முன்னாடி கண்டுபிடிச்ச MCA உனக்கு பெரிசுன்னா, 10000 வருஷத்துக்கு முன்னாடி என் தாத்தன் கண்டுபிடிச்ச ஜோதிடம் எனக்கு பெரிசு.

இப்பவும் சொல்றேன்,

ஜோதிடம் எங்கள் தொழிலல்ல எங்கள் உயிர்.

Monday, December 2, 2013

மூலிகைகளால் செய்த மூலிகை கணபதி

பதினெட்டு சித்தர்கள் அருளியபடி 108 அபூர்வ காயகல்ப மூலிகைகளால் செய்த மூலிகை கணபதி. விரதம் இருந்து மூலிகைகளுக்கு சாபநிவர்த்தி அளித்து சித்தர்கள் முறைப்படி அருளிய அபூர்வ மூலிகை கணபதி.


இதை வீடு, தொழில் கூடங்கள், வியாபாரம் செய்யும் இடங்களில் வைத்து வணங்கி வந்தால் நஷ்டங்கள் குறையும். கஷ்டங்கள் விலகும். லாபங்கள் பெருகும். தொழில் விருத்தி ஏற்படும். 


வீட்டில் வைத்து வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். தீய சக்திகள் நம்மை விட்டு ஓடும். புத்திர பாக்கியம் கிட்டும். திருமணத் தடைகள் விலகும்.

இதை வாங்குபவர்களுக்கு:
வீட்டில் திருஷ்டி கழிக்க பயன்படும் விசேஷ மூலிகை சாம்பிராணி இலவசம்



விலை: ரூபாய்.999/- Inclusive of CourierCharges

மேலதிக விபரங்களுக்கு:

Distributed by:
Sriram Vedic, Chennai. Call: 7845119542
Email: ramjothidar@gmail.com

Sunday, December 1, 2013

டிசம்பர் மாத ராசி பலன்கள் - பொது

மேஷம்
(அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

சொந்த முயற்சியாலும், மனதுணிவுட னும் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறும் மேஷ ராசியினரே

கிரகநிலை:
ராசியில் கேது, தைரிய வீரிய ஸ்தானத்தில் வக்ர நிலையில் பாக்கிய விரையாதிபதி குரு, ரண ருண ரோக ஸ்தானத்தில் ராசிநாதன் செவ்வாய், ஏழாம் ராசியில்  தொழில் லாபாதிபதி சனி - ராகு, ஆயுள் ஸ்தானத்தில் பஞ்சமாதிபதி சூரியன், தைரிய ரோகாதிபதி புதன், பாக்கியஸ்தானத்தில் தன களத்திராதிபதி சுக்கிரன் என கிரக அமைப்பு இருக்கிறது. 3ம் தேதி சுக்கிரன் மகர ராசிக்கும், 16ம் தேதி சூரியன் தனுசு ராசிக்கும், பெயர்ச்சியாகிறார்கள்.

இந்த மாதம் ராசியாதிபதி செவ்வாய் சுக்கிரனுடன்  மாத தொடக்கத்தில் கேந்திரமும் பின் கோண சேர்க்கையும் பெற்று இருப்பது  காரியங்களில் அவசரமாக செயல்படச் செய்யும்.  நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 8ல் வார இறுதியில் தொடங்குவதால் மனதடுமாற்றம் ஏற்படலாம். வாகனங்களில்  செல்லும் போது கவனம் தேவை.
தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள்  பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே  திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம்.  பெண்களுக்கு சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மைதரும்.  மாணவர்களுக்கு  கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: 2, 3, 29, 30
அதிர்ஷ்டம் தரும் நாட்கள்: 24, 25, 26
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி
பரிகாரம்: முருகனை வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனக்கவலை நீங்கும்.


------------------------------
---------


ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)


இனிய சுபாவமும், மென்மையான பேச்சும்  உடைய ரிஷபராசியினரே
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் வக்ர நிலையில் ஆயுள் லாபாதிபதி குரு, பஞ்சம ஸ்தானத்தில் களத்திர விரையாதிபதி செவ்வாய், ரண ருண ரோக ராசியில்  பாக்கிய தொழில் ஸ்தான அதிபதி சனி - ராகு, களத்திர ஸ்தானத்தில் சுகாதிபதி சூரியன், தன பஞ்சமாதிபதி புதன், ஆயுள்ஸ்தானத்தில் ராசிநாதன் சுக்கிரன், விரையராசியில் கேது  என நவகிரக சஞ்சாரம் உள்ளது. 3ம் தேதி ராசிநாதன் சுக்கிரன் மகர ராசிக்கும், 16ம் தேதி சூரியன் தனுசு ராசிக்கும், பெயர்ச்சியாகிறார்கள்.


இந்த மாதம் ராசியாதிபதி சுக்கிரன்  செவ்வாயுடன்  மாத தொடக்கத்தில் கேந்திரமும் பின் கோண சேர்க்கையும் பெற்று இருப்பது   பொன்பொருள் சேர்க்கையை தரும். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். ராசிக்கு 3ல் மாத மத்தியில் சூரியனுடைய பார்வை இருப்பதால் போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். தம்பதிகளிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனகசப்பு மாறும்.  பெண்களுக்கு எதைபற்றியாவது நினைத்து கவலைபடுவீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை.  விருந்து நிகழ்ச்சியில் பங்கு பெறுவீர்கள். சந்தோஷங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு  கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 4, 5, 31
அதிர்ஷ்டம் தரும் நாட்கள்: 27, 28, 29
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன்; தேய்பிறை: திங்கள், புதன், வியாழன்
பரிகாரம்:  பவுர்ணமி தோறும் அம்மனை வழிபட்டு வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் மனகவலை நீங்கும்.


------------------------------
---------


மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

காலம் தாழ்த்தாமல் எதையும் உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும் என்ற வேகமும் அதே வேளையில் விவேகமும் கொண்ட மிதுன ராசியினரே,
கிரகநிலை:
ராசியில் வக்ர நிலையில் களத்திர தொழில் அதிபதி குரு, சுகஸ்தானத்தில் ரண ருண லாபாதிபதி செவ்வாய், பஞ்சம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆயுள் பாக்கிய ஸ்தான அதிபதி சனி - ராகு, ஆறாம் ஸ்தானத்தில் தைரியாதிபதி சூரியன், ராசிநாதன் புதன், ஏழாம் ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய விரையராசிநாதன் சுக்கிரன், லாபஸ்தானத்தில் கேது என கிரக பீடம் அமைந்திருக்கிறது. 3ம் தேதி சுக்கிரன் ஆயுள்ஸ்தான மகர ராசிக்கும், 16ம் தேதி சூரியன் ஏழாம் வீடு தனுசு ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

இந்த மாதம் திடீர் கோபம் ஏற்படலாம். மேலும் ராசியாதிபதி புதன் இருக்கும் வீட்டிற்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இருப்பதால் எல்லாவற்றிலும் நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக் கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  குழந்தைகள் எதிர்கால நலன்பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.  பெண்களுக்கு எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். பணவரத்து திருப்தி தரும்.  மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

சந்திராஷ்டம தினங்கள்: 6, 7
அதிர்ஷ்டம் தரும் நாட்கள்: 30, 31
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், செவ்வாய்; தேய்பிறை: வெள்ளி, சனி
பரிகாரம்: பெருமாளை வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.



------------------------------
---------


கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

அன்பும் பாசமும் கருணையும் ஒருங்கே அமையப்பெற்ற கடகராசியினரே

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் பஞ்சம பூர்வ புண்ணிய தொழில் அதிபதி செவ்வாய், சுகஸ்தானத்தில் களத்திர ஆயுள் ஸ்தான அதிபதி சனி - ராகு, பஞ்சம ஸ்தானத்தில் தனாதிபதி சூரியன், தைரிய விரையாதிபதி புதன், ஆறாம் ஸ்தானத்தில் சுகலாபாதிபதி  சுக்கிரன், தொழில் ஸ்தானத்தில் கேது, விரைய ராசியில் வக்ர நிலையில் ரண ருண பாக்கியாதிபதி குரு  என கிரக சுழற்சியின் இருப்பு அமைந்திருக்கிறது. 3ம் தேதி சுக்கிரன் களத்திர ஸ்தான மகர ராசிக்கும், 16ம் தேதி சூரியன் ஆறாம் வீடு தனுசு ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

இந்த மாதம் தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் கேது வேலையின் நிமித்தம் உடல் அசதியை தரலாம். மனதில் ஏதாவது கவலை  இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும்.  பணவரத்தும் திருப்திதரும். வாடிக்கையாளர்களுக்கு உத்திரவாதங்கள்  தரும்போது கவனமாக இருப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணாமல் இருப்பதற்கு கவனமாக இருப்பது நல்லது.  குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள்  உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.  பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது.  பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். மற்றவர்களிடம்  சில்லறை சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பேசி பழகுவது நல்லது. மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த  மெத்தன போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.
சந்திராஷ்டம நாட்கள்:  8, 9, 10
அதிர்ஷ்டம் தரும் நாட்கள்: 1, 2
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: புதன், வியாழன்
பரிகாரம்: அன்னை பரமேஸ்வரியை வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும்.

------------------------------
--------------------------------

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)


மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு தனித்தன்மையுடன் செயலாற்றும் குணமுடைய சிம்மராசியினரே
கிரகநிலை:
தன ஸ்தானத்தில் சுகபாக்கியாதிபதி செவ்வாய், தைரிய வீர்ய ஸ்தானத்தில் தொழில் காரகன் சனி - ராகு, சுகஸ்தானத்தில் ராசியாதிபதி சூரியன், தனலாபாதிபதி புதன், பஞ்சம ஸ்தானத்தில் தைரிய தொழில் அதிபதி  சுக்கிரன், பாக்கிய ஸ்தானத்தில் கேது, லாப ஸ்தான ராசியில் வக்ர நிலையில் பஞ்சம பூர்வ புண்ணிய ஆயுள் ஸ்தானாதிபதி குரு  என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது.  3ம் தேதி சுக்கிரன் ஆறாமிட மகர ராசிக்கும், 16ம் தேதி ராசிநாதன் சூரியன் ஐந்தாம் வீடு தனுசு ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

இந்த மாதம் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் வக்ர குரு  ஆறாமிடத்தைப் பார்ப்பதால் உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். ராசியாதிபதி சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 4ல்  சஞ்சாரம் செய்வதால் தாயாரின்  நலனில் அக்கறை தேவை.  கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில்  மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் பணவரத்து சுமாராக இருக்கும். சரக்குகளை கவனமாக கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டா கும். உறவினர்களுக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு 5ம் இடமான கேதுவின் சஞ்சாரம் ஆன்மீகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தும்.  பெண்களுக்கு  தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து குறையலாம். மாணவர்களுக்கு  கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன்  இருந்த மனகசப்பு மாறும்.

சந்திராஷ்டமம்: 11, 12
அதிர்ஷ்டம் தரும் நாட்கள்: 3, 4
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வெள்ளி
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும்.


------------------------------
---------


கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)


எதையும் ஒருமுறை பார்த்தாலே அதை பற்றி கிரகித்துக் கொள்ளும் திறமையும் அதை ஆராயும் செயல்திறனும் உடைய கன்னி ராசியினரே
கிரகநிலை:
விரைய ஸ்தானத்தில் தைரிய ஆயுள் ஸ்தானாதிபதி செவ்வாய், தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - ராகு, தைரியஸ்தானத்தில் சூரியன், புதன், சுக ஸ்தானத்தில் தன பாக்கியாதிபதி  சுக்கிரன், ஆயுள் ஸ்தானத்தில் கேது, தொழில் கர்ம ஸ்தான ராசியில் வக்ர நிலையில் பஞ்சம பூர்வ புண்ணிய ஆயுள் ஸ்தானாதிபதி குரு  என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது.  3ம் தேதி சுக்கிரன் பூர்வ புண்ணிய மகர ராசிக்கும், 16ம் தேதி சூரியன் சுகஸ்தான தனுசு ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

இந்த மாதம் ராசியாதிபதி புதனின் சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் நெருக்கடியான பிரச்சனைகள் நீங்கும்.  பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.   பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மாத மத்தியில்  சூரியன் 4ல் சஞ்சரிக்க உள்ளதால் மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக  இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். தம்பதிகளிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில்  மதிப்பும், மரியாதையும் கூடும். பெண்கள் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும். மாணவ கண்மணிகள்  கல்வியில் முன்னேற்றம் காண  திட்டமிட்டு படித்து வெற்றி பெறுவீர்கள். மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும்.

சந்திராஷ்டமம்: 13, 14
அதிர்ஷ்டம் தரும் நாட்கள்: 5, 6, 7
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், புதன், வியாழன்
பரிகாரம்: ஸ்ரீசாஸ்தாவை வணங்கி வர சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும்.


------------------------------
---------


துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமையும் அதே வேளையில் திட்டமிட்டு சாதித்தே காட்டும் பிடிவாதமும் கொண்ட துலா ராசியினரே
கிரகநிலை:
ராசியில் சுகபஞ்சமாதிபதி உச்ச சனி - ராகு, தன வாக்கு ஸ்தானத்தில் லாபாதிபதி சூரியன், புதன், தைரிய ஸ்தானத்தில் ராசிநாதன்  சுக்கிரன், களத்திர ஸ்தானத்தில் கேது, பாக்கிய ஸ்தான ராசியில் வக்ர நிலையில் குரு, லாப ஸ்தானத்தில் தனாதிபதி செவ்வாய்  என நவக்கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றார்கள்.  3ம் தேதி ராசியாதிபதி சுக்கிரன் சுகஸ்தான மகர ராசிக்கும், 16ம் தேதி சூரியன் தைரிய வீர்ய ஸ்தான தனுசு ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

இந்த மாதம் 3ம் தேதிக்குப் பிறகு தடைபட்ட காரியங்கள் தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். ராசிக்கு 2ல் இருக்கும் கிரக இருக்கைகளால்  உங்கள் வாக்குவன்மையில் நன்மைகள்  ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பணப் பிரச்சனை நீங்கும். மாத மத்தியில்  ராசிக்கு 3ல் சஞ்சாரம் செய்ய உள்ள சூரியன் வாக்கு அதிபதி செவ்வாய்க்கு நாடி கோண்ம் பெறுவதால் நண்பர்கள் மூலம்  உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும் பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரிய ஒன்று நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். தம்பதிகளிடையே  விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 15, 16
அதிர்ஷ்டம் தரும் நாட்கள்: 8, 9, 10
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன்
பரிகாரம்: ”ஓம் ஸ்ரீமாத்ரே நம:” என 11 முறை சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். பணவரத்து அதிகரிக்கும்.


------------------------------
---------


விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

நியாயத்தின் பக்கம் நிற்கும் விருச்சிக ராசியினரே நீங்கள் அநியாயத்தை எதிர்க்கும் குணமுடையவர். கொடுத்த வேலையை திறம்பட செய்வதில் வல்லவர்.
கிரகநிலை:
விரைய ராசியில் தைரிய சுகாதிபதி உச்ச சனி - ராகு, ராசியில் தொழில் அதிபதி சூரியன், புதன், தன வாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன், ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது, ஆயுள் ஸ்தான ராசியில் வக்ர நிலையில் குரு, தொழில் ஸ்தானத்தில் ராசியாதிபதி செவ்வாய்  என கிரகங்கள் அமர்ந்து ஆசி கொடுக்கிறார்கள். 3ம் தேதி  சுக்கிரன் தைரிய ஸ்தான மகர ராசிக்கும், 16ம் தேதி சூரியன் தன ஸ்தான தனுசு ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

இந்த மாதம் எதிலும் கவனமாக செயல்படுவதும் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.  ராசிக்கு 2ல் விரையாதிபதி சுக்கிரன்  கேதுவுடன் நாடி கோண சம்பந்தம் பெற்று சஞ்சாரம் செய்வதால் எதையும்  நிர்ணயிக்கும் திறன் குறையும். பணவரத்து தாமதப்படும். கையிருப்பு கரையும். மற்றவர்களுக்காக உதவி செய்யும் போது  வீண்பழி சொல் கேட்க நேரலாம். கவனமாக இருப்பது நல்லது. உடல் சோர்வும் ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் இழுபறி யான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க நேரிடும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதற்குள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செய்வது நல்லது. தம்பதிகளிடையே  மனம் விட்டு பேசுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்புடன்  நடந்து கொள்வது நல்ல பலன் தரும்.   பெண்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை  நிர்ணயிக்கும் திறமை குறையும்.  அடுத்தவர் பிரச்சனை தீர்க்க உதவி செய்வதை  தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு  மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது நல்லது. அடுத்தவரை  நம்பி காரியங்களை செய்வதை தவிர்ப்பது நன்மை தரும்.


சந்திராஷ்டமம்: 17, 18, 19
அதிர்ஷ்டம் தரும் நாட்கள்: 11, 12, 13
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன், வெள்ளி; தேய்பிறை: புதன், வியாழன்
பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் முருகனை வணங்க குடும்ப  பிரச்சனை கள் தீரும். மனகவலை அகலும்.


------------------------------
---------


தனுசு
(மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)


யாருடைய அதிகாரத்துக்கும் கட்டுப் படாமல் தனித்தன்மையுடன் விளங்கும்  தனுசு ராசியினரே
கிரகநிலை:
ராசியில் சுக்கிரன், பஞ்சம பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் கேது, களத்திர ஸ்தானத்தில் வக்ரநிலையில் ராசிநாதன் குரு, பாக்கியஸ்தானத்தில் செவ்வாய், லாப ஸ்தானத்தில் சனி - புதன் - ராகு என கிரகங்கள் இருப்பு உள்ளது. 3ம் தேதி  சுக்கிரன் தன வாக்கு குடும்ப ஸ்தான மகர ராசிக்கும், 16ம் தேதி சூரியன் உங்கள் ஸ்தான தனுசு ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

இந்த வாரம் ராசியாதிபதி குருவின் பார்வையால் எதிலும் சாதக மான பலன் கிடைக்கும். தடைபட்ட  பணம் வந்து சேரும். ராசிக்கு ஐந்தில்  கேதுவும், பத்தாம் அதிபதி புதன் லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் பயணங்கள் உண்டாகும். அதனால் நன்மையும் ஏற்படும். உங்களது செயல் கள் மற்றவர்களை கவரும் விதத்தில் இருக்கும். ஆனால் மனதில்  ஏதாவது கவலை இருந்து கொண்டிருக்கும். மற்றவர்கள் மூலம் உதவிகள்  கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சுறுசுறுப்படையும். வியாபார விரிவாக்கம் செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய அனுகூலம் கிடைக்க பெறுவார்கள். புத்திசாதூரியத்தால் காரிய நன்மை பெறுவார்கள். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். தம்பதிகளுக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்பது மனதுக்கு இதம் அளிக்கும். செயல் திறன் அதிகரிக்கும். பெண்களுக்கு உங்களது  செயல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். பயணங்கள் மூலம் சாதக மான பலன்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் பாராட்டு வார்கள். சக மாணவர் மத்தியில் மதிப்பு கூடும்.

சந்திராஷ்டமம்: 20, 21, 22
அதிர்ஷ்டம் தரும் நாட்கள்: 14, 15, 16
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன்; தேய்பிறை: திங்கள், வியாழன்
பரிகாரம்: விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.


------------------------------
---------





மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

பார்த்தால் கடுமையானவர் போல் தோற்றமும் மனதில் குழந்தை போலும் இருக்கும் மகர ராசியினரே நீங்கள் பழகினால் இனிமையானவர்.
கிரகநிலை:
சுகஸ்தானத்தில் கேது, ரண ருண ஸ்தானத்தில் வக்ரநிலையில் தைரிய விரையாதிபதி குரு, ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் சனி - புதன் - ராகு, விரையராசியில் சுக்கிரன் என நம்மை செயல்படுத்தும் கிரகங்கள் வீற்றிருக்கிறார்கள். 3ம் தேதி  சுக்கிரன் உங்கள் ஸ்தான மகர ராசிக்கும், 16ம் தேதி சூரியன் உங்கள் விரையஸ்தான தனுசு ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

இந்த மாதம் ராசியாதிபதி சனி பத்தில் சஞ்சரிப்பதால் காரிய தடைகளை மீறி வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். 4ல் சஞ்சரிக்கும் கேதுவை  புதன் பார்ப்பதன் மூலம் வீண் அலைச்சல் ஏற்படலாம். சில நேரங்களில் நிர்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர் விவகாரங்களில் கவனம் தேவை. ஆர்டர்கள் கிடைப்பது திட்டமிட்டபடி இல்லாமல் தாமதமாகும். வேலையாட்க ளிடம் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நினைத்தபடி பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் கருத்துவேற்றுமை ஏற்படும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நன்மை தரும். பெண்களுக்கு எதிலும் எச்சரிக்கையாக வும் கவனமாகவும் இருப்பது நல்லது. மனதடுமாற்றம் உண்டாகலாம். செலவு கூடும். மாணவர்களுக்கு  அதிக நேரம் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 23, 24
அதிர்ஷ்டம் தரும் நாட்கள்: 17, 18
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: வியாழன், வெள்ளி; தேய்பிறை: வியாழன், வெள்ளி
பரிகாரம்: ஸ்ரீநரசிம்ஹ ஸ்வாமியை வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். மனக்கவலை நீங்கும்.


------------------------------
---------


கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

தன்னலம் கருதாமல் பிறர் நலத்தை மனதில் கொண்டு செயல்படும் கும்ப ராசியினரே,
கிரகநிலை:
தைரியஸ்தானத்தில் கேது, பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வக்ரநிலையில் தன லாபாதிபதி குரு, ஏழாம் ஸ்தானத்தில் செவ்வாய், பாக்கிய ஸ்தானத்தில் ராசிநாதன் சனி - புதன் - ராகு, லாப ராசியில் சுக்கிரன் என கிரகங்கள் இருப்பு இருக்கிறது. 3ம் தேதி  சுக்கிரன் உங்கள் விரைய ஸ்தான மகர ராசிக்கும், 16ம் தேதி சூரியன் உங்கள் லாபஸ்தான தனுசு ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

இந்த மாதம் எல்லாவகையி லும் லாபம் கிடைக்கும். ராசிக்கு மூன்றம் இடத்தில் கேது இருக்கிறார், அவரை சனி பார்க்கிறார், எனவே உங்கள் வாக்கு வன்மையால் எதுவும் சாதகமாக நடக்கும். நல்ல சிந்தனை உண்டாகும். அறிவுதிறன் அதிகரிக்கும். சில நேரங்களில் மற்றவர்கள் பேசுவதை தவறாக புரிந்து கொள்ள நேரிடும், மனோ தைரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள்  கிடைப்பார்கள். தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேல் அதிகாரிகள் கூறிய படி காரியங்களை செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். நண்பர்கள், உறவினர்கள் இடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு நல்ல சிந்தனை ஏற்படும். மனோ பலம் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து கல்வியில் வெற்றி பெற நன்கு படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம்: 25, 26
அதிர்ஷ்டம் தரும் நாட்கள்: 19, 20, 21
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி
பரிகாரம்: சனி பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றிபெறும். துன்பங்கள் விலகும்.


------------------------------
---------


மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட்டு வரும் மீன ராசியினரே நீங்கள் காலத்தை  வீணாக்க மாட்டீர்கள்.
கிரகநிலை:
தனஸ்தானத்தில் கேது, சுகஸ்தானத்தில் வக்ரநிலையில் ராசிநாதன் குரு, ஆறாம் ஸ்தானத்தில் செவ்வாய், ஆயுள் அஷ்டம ஸ்தானத்தில் சனி - புதன் - ராகு, பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், தொழில் ராசியில் சுக்கிரன் என கிரகங்கள் அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள். 3ம் தேதி  சுக்கிரன் உங்கள் லாப ஸ்தான மகர ராசிக்கும், 16ம் தேதி சூரியன் தொழில் ஸ்தான தனுசு ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

இந்த மாதம் ராசியாதிபதி குரு ராசிக்கு 4ல் சஞ்சாரம் வக்ரமாக இருப்பதால் பணதேவை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் அவப்பெயர் உண்டாகலாம். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.  ராசிக்கு 2ல் கேது சஞ்சரிப்பதால் திடீர் மன குழப்பத்தை ஏற்படுத்தும். முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். தொழில், வியாபாரம் பற்றிய கவலை உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க  வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது நெருக்கடியான  நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தம்பதிகளிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. பெண்களுக்கு பண தேவை அதிகரிக்கும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். வேலை பளு அதிகரிக்கும். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் மெத்தனம் காணப்படும். கல்வியில் வேகம் காட்டுவது வெற்றிக்கு நல்லது.

சந்திராஷ்டமம்: 1, 27, 28
அதிர்ஷ்டம் தரும் நாட்கள்: 22, 23
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன்
பரிகாரம்: வியாழக்கிழமையில் நவக்கிரகங்களை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும்.

Monday, November 18, 2013

அறிவிப்பு:


[1] சில சொந்த காரணங்களால் கார்த்திகை மாத குறிப்புகள் தர இயலவில்லை. இன்று தருகிறோம். 
[2] மூவராகிய ஒருவன் பதிவு போட்டாலும் போட்டோம், சனி 5ல் இருப்பவர்கள் அனைவருக்கும் தோஷமா என பதில்கள்.

அதற்கான விளக்கம்:

அன்பின் சொந்தங்களே, நாம் சொன்னது பொதுவில்தான். 5ல் சனி இருக்கும் அனைவருக்கும் தோஷம் வந்து சேர்வதில்லை.

Monday, November 4, 2013

மூவராகிய ஒருவன்:


கடலூருக்கு அருகில் இருக்கும் திருவஹீந்திரபுரத்தில் தேவநாதப் பெருமாள் ஆலயம் உள்ளது. 



இங்கு கோவிலின் உற்சவராக ‘மூவராகிய ஒருவன்’ விளங்குகிறார். இவரது வலது உள்ளங்கையில் பிரம்மதேவரின் தாமரைப்பூ சின்னமும், நெற்றியில் சிவபெருமானின் சின்னமான நெற்றிக்கண்ணும், சிரசில் ஜடையும், இரண்டு கரங்களிலும் விஷ்ணுவின் சின்னமான சங்கு சக்கரங்களும் காணப்படுகின்றன. இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண இயலாது. இங்கு குன்றின் மீது சிறப்பு வாய்ந்த ஹயக்ரீவர் சந்நிதி உள்ளது.

குறிப்பு: லக்னத்திற்கு 5ல் சனி இருக்கும் அமைப்பு உள்ளவர்கள் இந்த கோவிலுக்குச் சென்று வந்தால் தோஷம் நீங்கும்.

கொஞ்சம் சின்ன சின்ன செய்திகள்:


தேரில் பவனி வரும் சூரிய பகவான்:
கருநாடக மாநிலம் பட்டடக்கல் என்னும் திருத்தலத்தில் உள்ள விருபாக்ஷர் திருக்கோவிலில் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் நின்ற நிலையில் பவனி வருவதைப் போன்று காட்சி அளிக்கிறார். அவருக்கு முன்னால் அவரது தேரோட்டியான அருணன் உட்கார்ந்த நிலையில் இருக்கிறார். இது ஒரு அரிய காட்சியாகும்.

ஆனந்தத் தாண்டவத்தில் நடராஜர்:
மயிலாடுதுறை ஆனந்தத் தாண்டவபுரத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில் உள்ள நடராஜர் அபூர்வ சிறப்பு கொண்டவர். நடராஜர் காலின் கட்டை விரலால் மட்டுமே நின்று கொண்டு திருவாச்சியில் ஓர் இடத்திலும் பிடிப்பு இல்லாமல் மூக்குக்கு நேராக காலைத் தூக்கி கால் சாயாமல் நர்த்தனம் ஆடுகிறார். ஆனந்த மாமுனிவருக்காக நடனம் ஆடியதால் இந்த ஊருக்கு ஆனந்த தாண்டவபுரம் என்று அழைக்கப்படுகிறது.


ஏழு தலை நாகத்தின் மீது ஸ்ரீரங்கநாதர்:
கருநாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் ஸ்ரீரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீரங்கநாதர் ஏழுதலை நாகத்தின் மீது ஆயாசம் தீர பள்ளி கொண்டிருக்கும் காட்சியைக் காணலாம். ஒரு தலை நாகம் ஐந்து தலை நாகங்கள் என்று இருக்க இந்த தலத்தில் ஏழு தலை நாகம் மீது பெருமாள் பள்ளி கொண்டுள்ளார்.

இந்த ஸ்தலம் பஸ்சிரங்கநாத க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
 

தவிடு அபிஷேகம்:
கொடுங்கோளூர் அம்மன் கோவிலில் தவிடு அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள சிவாலயத்தின் கோபுரம் மரக்கூரையால் ஆனது.

அமாவாசை மலை:
சேலம் - கஞ்சமலையில் கஞ்சமலை சித்தர் என்பவர் வாழ்ந்தார். இவரது சீடர்கள் அகோரர், மாளிகைத்தேவர், நாதாந்தர் போகர், பரமானந்தர் ஆகியவர்கள் அமாவசையன்று இந்த மலைக்கு வருவதாக கூறுகிறார்கள். எனவே இந்த மலை அமாவாசை மலை என்று அழைக்கப்படுகிறது.

Tuesday, October 29, 2013

இட்லிவடை - 10 வருடம்

கடந்த 10 வருடங்களுக்கு முன் திருநெல்வேலியில் ஒரு மென்பொருள் சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றிய போது எங்கள் நண்பர் இட்லிவடை பிளாக்கைப் பற்றி எடுத்துரைத்தார். அன்று முதல் இன்று வரை தினமும் இட்லிவடை பிளாக்கை நாம் பார்க்காமல் இருந்தது இல்லை.


 


ஆனால் ஒன்று இட்லிவடை பிளாக்கைத் தொடர்ந்து பின்பற்றி வருபவர்களுக்குத் தெரியும். இப்போது எழுதுபவர் இட்லிவடை இல்லையென்று.

ஒரு முகமூடி போட்டுக் கொண்டதன் விளைவு, இட்லிவடையை கடைசி வரை பார்க்க இயல்வில்லை.

பா.ரா, பத்ரி போன்ற பலரிடம் நீங்கள்தான் இட்லிவடையா? என கேட்ட காலமுண்டு.

எஸ்.வி.சேகர் பிரச்சனை, திடிரென்று இட்லிவடை ஐடியை ஹேக் செய்தது, எங்களது முதல் ராசிபலன் வெளியானது, 2009ம் ஆண்டு மக்களவை தேர்தல் கருத்துகணிப்பு, இலக்கியம் சார்ந்த விடயங்கள், அரசியல், நாட்டு நடப்புகள் போன்ற பலவிதமான சரமான பதிவுகளை மறக்க இயலாது.


10ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இட்லிவடைக்கு வாழ்த்துக்கள்.


குறிப்பு: எம்மை பிளாக் எழுத தூண்டியவர்கள், 2 நபர்கள்.
[1] இட்லிவடை - முகமூடி அணிந்த பிளாக்கர்
[2] நிலாரசிகன்  - எம் பள்ளித் தோழர்

வேண்டுகோள்:
[1] முதலில் உங்கள் பழைய இலை படத்தையேப் போடவும்.
[2] தினமும் ஒரு பதிவு போடவும்.
[3] பழைய காரசாரம் வேண்டும்.

Link: http://idlyvadai.blogspot.in/2013/10/blog-post_2982.html

இந்த லிங்கைப் போட்டால் மட்டும்தான் பேனர் வருகிறது. மற்றபடி வெறுமனே (http://idlyvadai.blogspot.in/) என போட்டால் ராகுலும் மன்மோகனும் வருகிறார்கள்.

Monday, October 21, 2013

நலம் தரும் நவம்பர் மாதம்


 
  • நவம்பர் மாத பொது ராசி பலன்கள்
  • 27 நக்ஷத்ரகாரர்களுக்கும் பிரத்யேக சந்திராஷ்டம தினங்கள்
  • ஆன்மீகக் குறிப்புகள்
  • சுபமுகூர்த்த தினங்கள்
  • கிரஹங்களின் பாதசாரம்
  • தீபாவளி கங்கா ஸ்நானம் ஏன்? எப்படி? எப்போது?
  • இந்த மாத திருக்கோவில் 
 போன்ற பல தகவல்கள் 25-10-2013 வெள்ளிக்கிழமை அன்று எமது Blogல் காணத்தவறாதீர்கள்.

Sunday, October 20, 2013

இந்த வாரம் இப்படித்தான் - 20-10-2013 - 26-10-2013 - 27 நக்ஷத்ரகாரர்களுக்கும் பிரத்யேக பலன்கள் (பொது)




அஸ்வினி:
எந்த ஒரு காரியத்தையும் திறமையாக செய்து முடிப்பீர்கள். எல்லோராலும் நேசிக்கப்படுவீர்கள். இந்த வாரம் எதிலும்  எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். தேவையற்ற மன சஞ்சலம் வரலாம். அதனால் எந்த ஒரு வேலைபற்றியும் அதிகம் யோசிப்பதை தவிர்ப்பது நல்லது. திடீர் பணதேவை உண்டாகலாம். சூரியன் சஞ்சாரத்தால் வெளியூரில் இருந்து வரும் கடிதங்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.




பரணி:
தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும், சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை.  கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.


கார்த்திகை:
எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.  மேலிடம் ஆதரவு கிடைத்தாலும் சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.  இடமாற்றத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.  தடைதாமதம் உண்டாகலாம். எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும்.


ரோகினி:
நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்து கொள்வீர்கள். நீங்கள் கடுமையாக உழைக்க தயங்காதவராக இருப்பீர்கள். இந்த வாரம் எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். எதிலும் சாதகமான  பலன் கிடைக்கும்.  திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். ராசிநாதனின் சஞ்சாரம் பொருள் வரவை தரும்.  செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.


மிருகசீரிஷம்:
தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை  அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். 


திருவாதிரை:
திறமையாக சமாளித்து எந்த பிரச்சனையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம்  காணப்படும். புதிய முயற்சிகளை  தள்ளி போடுவதும், எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பதும் நல்லது. வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய் தொழில் சிறக்கும்.



புனர்பூசம்:
பேச்சாற்றல் மூலம் எப்படிப்பட்ட சிக்கலான காரியங்களையும் சுமூகமாக முடித்துக் கொள்வீர்கள். இந்தவாரம்  பொருள் வரவையும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தரும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம். செய்தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். 


பூசம்:
மேல் அதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன் தாமதப்படும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமைகண்டு மனமகிழ்ச்சி கொள்வீர்கள்.


ஆயில்யம்:
வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த  உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.  தொழிலில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். உபதொழிலில் மிகவும் கவனமாக இருப்பதுடன் புதிய முயற்சிகளை தள்ளிபோடுவதும் நல்லது. எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். தம்பதிகளுக்குள் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும்.






மகம்:
நீங்கள் இனிமையாக பேசி மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து  செய்வது நல்லது.  மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 




பூரம்:
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே நேரத்தில் சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.  அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது. 
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷன் ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரித்து செல்வது நல்லது. 





உத்திரம்:
கணவன் மனைவிக்கிடையே  மனம் விட்டு பேசி செயல்படுவது நன்மை தரும். பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள்.  நண்பர்களிடம் உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். புதிய செயல்களை யோசித்து செய்வது நல்லது. பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். 



ஹஸ்தம்:
எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும். கருமமே கண்ணாக இருப்பீர்கள். நீங்கள் எல்லோராலேயும்  நேசிக்க கூடியவராகவும் இருப்பீர்கள். இந்தவாரம் முன்புதடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். வெளியூர்  பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள்  பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பவர்கள் சூரிய சஞ்சாரம் புதனுடன் சேர்ந்து இருப்பது மன தெளிவை உண்டாக்கும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும்.




சித்திரை:
தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் விருத்தி அடைவதுடன் ஆதாயமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். பணவரத்தும்  இருக்கும் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.





ஸ்வாதி:
தடைபட்ட சுபகாரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனதெளிவு உண்டாகும். பணவரத்து இருக்கும்.  திறமை வெளிப்படும். சக ஊழியர்களால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். நட்புக்கு முதலிடம் கொடுத்து காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். இந்த வாரம் பணவரத்தை அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும்.  




விசாகம்:
எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது  வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை  செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.




அனுஷம்:
கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன்  பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது.  மூதலீடு செய்வதற்கு முன் கவனமாக ஆலோசனைகள் செய்வது நன்மை தரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை.



கேட்டை:
தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கும். செல்வம் சேரும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். ஊண், உறக்கம் இன்றி கடுமையாக உழைப்பீர்கள். அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள். சொத்து சம்பந்தாமாக எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.



மூலம்:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம். மேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும்.  பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.



பூராடம்:
நீண்டநாட்களாக இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை. எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும். அனைவரும் நல்லமுறையில் உங்களுடன் பழகுவார்கள். உங்களுக்கு வரும் முன்கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். 





உத்திராடம்:
இந்தவாரம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள்  சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு  தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும்.




திருவோணம்:
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது.  மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணவரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. சக ஊழியர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது.  தொழிலில் முன்னேற்றம் காண கூடுதல் ஆலோசனை செய்வது நல்லது. 



அவிட்டம்:
சுபகாரியங்களில் இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும். நிதானமாகவும், செம்மையாகவும் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். உங்களை எல்லோரும் நேசிப்பார்கள். இந்த வாரம் பணவரவு அதிகமாகும். எதிர்ப்புகள்  நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும்  அவர்களால் உதவியும் கிடைக்கும்.



சதயம்:
தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வார இறுதியில் உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம். 




பூரட்டாதி:
பிள்ளைகள் மனம் மகிழும் படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.



உத்திரட்டாதி:
எல்லோராலும் பாராட்டப்படும் வகையில் நடந்து கொள்வீர்கள். வரவை போலவே செலவும் இருக்கும். வெளியூர்  பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். எனவே கவனமாக இருப்பது நல்லது.  திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும்.  கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சி வீண் முயற்சியாக இருந்தாலும் பின்னாளில் அதற்கான பலன் கிடைக்கும். 



ரேவதி:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும்.  குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.  வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக்கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கவனம் தேவை. முயற்சிகள் தாமதப்படும். 

Saturday, October 12, 2013

அனைவருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி நல்வாழ்த்துக்கள்

அறிவிப்பு

அன்பின் சொந்தங்களுக்கு,

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரின் பணிவான வணக்கங்கள்.

நாம் 27 நக்ஷத்ரகாரர்களுக்கும் ஐப்பசி மாத பொது பலன்கள் கொடுத்துள்ளதால், இவ்வாரத்திற்கான பொது ராசி பலன்கள் வெளியிடப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்த வாரம் வழமை போல் இந்த வாரம் இப்படித்தான் பகுதி வெளிவரும்.


என்றும் ஆசிகளுடன்,

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

நவராத்திரி வழிபாட்டு முறை ஒன்பதாம் நாள் - தொடர் 10

நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்

அம்பாள்    ஸ்ரீபிராஹ்மி 

உருவ அமைப்பு    அன்ன வாகனம், கையில் ஏடு, ஜெபமாலை, கமண்டலம் கொண்டவள். நான்கு முகம் உடையவள்.


குணம்    சௌம்யம்


சிறப்பு    ஸ்ரீபிரும்மாவின் அம்சம்


நெய்வேத்யம்    சர்க்கரைப் பொங்கல், சுண்டல், பால் பாயாசம்


பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 9 - 10.30, மாலை 6 – 7.30


மலர்    மல்லிகை, செம்பருத்தி, கேந்தி


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    11


பாட வேண்டிய ராகம்    கானடா, குறிஞ்சி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    ரோகினி, ஹஸ்தம், திருவோணம்


திசை புத்தி நடப்பவர்கள்    சூரியன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சூரியன் அல்லது ராகு இருப்பவர்கள்


விசேஷம்        வித்யாதாரிணி -  கல்வி, வித்தைகளுக்கு அதிபதி

எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 1 உடையவர்கள்


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
        மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
        இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
         கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
  


[2] மூல மந்திரம்:  ஓம் - சிம் - பிராஹ்மயே - நம :


[3] காயத்ரி:  ஓம் தேவி பிராம்யை வித்மஹே மஹா சக்த்யைச தீமஹி தந்தோ தேவி பிரசோதயாத்!

ஐப்பசி மாத ஆன்மீக ஜோதிட குறிப்புகள்

ஐப்பசி மாத ஆன்மீக ஜோதிட குறிப்புகள்

Friday, October 11, 2013

முருகன் செய்திகள் - பாகம் 01

நம் அனைவருக்கும் தெரிந்தது ஈரோடு சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில்.






அத்தலத்தின் சிறப்புகள்:
  • இத்திருக்கோவில் சுமார் 3000 வருடங்கள் பழமை வாய்ந்தது. 
  •  சித்தர்களுள் ஒருவரான பின்நாக்கு சித்தர் வாழ்ந்து முக்திய்டைந்த திருத்தலம்.
  •  ஸ்ரீஅருணகிரிநாதரின் திருப்புகழ் பாடப்பெற்று முருகப்பெருமானால் படிக்காசு வழங்கப் பெற்ற திருத்தலம்.
  •  ஸ்ரீபாலன் தேவராய ஸ்வாமிகளால், ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட திருத்தலம் 
  •  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தானாகவே பொங்கி வழியும் மாமாங்க சுணை அமைந்துள்ள திருத்தலம் 
  •  வளர்பிறை சஷ்டி திருநாளில் விரதம் கடைபிடிப்போர் குழந்தைப்பேறு பெற்று வரும் திருத்தலம் 
  •  மூலவர் தினசரி அபிஷேகத்திற்கு எருதுகள் மூலம் படிவழியே திருமஞ்சனம் கொண்டு வரும் சிறப்பு பெற்ற திருத்தலம் 
  •  மூலவர் செவ்வாயாக அமைந்து மூலவரை சுற்றி நவக்கிரகங்கள் எட்டு நவக்கிரஹகங்களும் அழகிய தேவ கோஷ்டத்தில் பாங்குடன் அமைந்திருக்கும் திருத்தலம் 
  •  ஸ்ரீவள்ளி, ஸ்ரீதேவசேனா தேவியர் இருவரும் ஒரே கல்லில் பிரபையுடன் அமைக்கப்பட்டு தனிக்கோவிலாக வீற்றிருப்பது வேரெங்கும் காண முடியாதது.

நவராத்திரி வழிபாட்டு முறை எட்டாம் நாள் - தொடர் 9

நவராத்திரி வழிபாட்டு முறை - எட்டாம் நாள்


அம்பாள்    ஸ்ரீநரஸிம்ஹி



 




உருவ அமைப்பு    மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கரம் கொண்டவள். சிம்ம வாகனம்


குணம்    குரூரம் (சத்ருக்களை )


சிறப்பு    ஸ்ரீநரஸிம்மரின் அம்சம்


நெய்வேத்யம்    சர்க்கரைப் பொங்கல், பானகம், விடாப்பருப்பு


பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 10.30 - 12.00, மாலை 6 – 7.30


மலர்    துளஸி, மரிக்கொழுந்து, பச்சிலை


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    8


பாட வேண்டிய ராகம்    காம்போதி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    கார்த்திகை, உத்திரம், உத்திராடம்


திசை புத்தி நடப்பவர்கள்    சனி திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சனி அல்லது கேது இருப்பவர்கள்


விசேஷம்        சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுவிப்பவள்

எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 8 உடையவர்கள்


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
       காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
       சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
       நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.


[2] மூல மந்திரம்:  ஓம் - ஸ்ரீம் - நரஸிம்யை - நம :


[3] காயத்ரி:  ஓம் நரசிம்மாய வித்மஹே வஜ்ர நாகாய தீமஹி தன்னோ நரசிம்மி பிரசோதயாத்!

நவராத்திரி வழிபாட்டு முறை ஏழாம் நாள் - தொடர் 8

நவராத்திரி வழிபாட்டு முறை - ஏழாம் நாள்




அம்பாள்    ஸ்ரீமகாலக்ஷ்மி


உருவ அமைப்பு    கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் கொண்டவள்.


குணம்    சௌம்யம்


சிறப்பு    ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மனைவி


நெய்வேத்யம்    பால் சாதம், பால் பாயாசம்


பூஜை செய்ய உகந்த நேரம்    மாலை 6 – 7.30


மலர்    முல்லை, வெண்மை நிறமுடைய பூக்கள்


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    11


பாட வேண்டிய ராகம்    கல்யாணி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    பரணி, பூரம், பூராடம்


திசை புத்தி நடப்பவர்கள்    சுக்ர திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சுக்ரன் அல்லது சனி இருப்பவர்கள்


விசேஷம்        சகல சம்பத்தையும் தருபவள், செல்வத்தை அளிப்பவள், அன்புக்கு அடிபணிபவள்.

எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 6 உடையவர்கள்


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
    மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர் தம்
    விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ
    பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப்  பைங்கிளியே


[2] மூல மந்திரம்:  ஓம் - லம் - லக்ஷ்மியை - நம :


[3] காயத்ரி:  ஓம் மஹாதேவ்யைச வித்மஹே விஷ்ணு பத்யைச தீமகி தன்னோ லக்ஷ்மி பிரசோதயாத்!

Thursday, October 10, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை - ஆறாம் நாள் - தொடர் 7


நவராத்திரி வழிபாட்டு முறை - ஆறாம் நாள்


அம்பாள் கௌமாரி


உருவ அமைப்பு மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள்.


குணம் சௌம்யம்


சிறப்பு ஸ்ரீமுருகனின் அம்சம்


நெய்வேத்யம் தேங்காய் சாதம், தேங்காய் பால்


பூஜை செய்ய உகந்த நேரம் காலை 9 - 10.30, மாலை 6 – 7.30


மலர் செவ்வரளி


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் 7

பாட வேண்டிய ராகம்
காவடி சிந்து


யார் யாரெல்லாம் வணங்க வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள் அசுபதி, மகம், மூலம்


திசை புத்தி நடப்பவர்கள் குரு திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள் லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் குரு அல்லது செவ்வாய் இருப்பவர்கள் விசேஷம் சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.

எண் கணிதப்படி வணங்க வேண்டியவர்கள்: பெயர் எண் 9ல் பிறந்தவர்கள்


சொல்ல வேண்டிய பாடல்:


[1] பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!

[2] மூல மந்திரம்: ஓம் - சிம் - கௌமாரியை - நம :


[3] காயத்ரி: ஓம் சிகித் வஜாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தந்நோ: கௌமாரி ப்ரசோதயாத்

Wednesday, October 9, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை ஐந்தாம் நாள் - தொடர் 6

நவராத்திரி வழிபாட்டு முறை - ஐந்தாம் நாள்
 
 
 



அம்பாள்    மகேஷ்வரி


உருவ அமைப்பு:    திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். பெரும் சரீரம் உடையவள்.


குணம்    சௌம்யம்


சிறப்பு:    ஸ்ரீசிவனின் அம்சம்


நெய்வேத்யம்:    புளியோதரை, உளுந்தன்னம் - இனிப்பு


பூஜை செய்ய உகந்த நேரம்:    காலை 9 - 10.30, மாலை 6 – 7.30


மலர் :   வில்வ இலை, மரிக்கொழுந்து


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    11


பாட வேண்டிய ராகம்:   அடானா


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்:    ஆயில்யம், கேட்டை, ரேவதி


திசை புத்தி நடப்பவர்கள்:    புதன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்:    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் புதன் அல்லது கேது இருப்பவர்கள்


விசேஷம்:        கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
    போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
    காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
    சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே

[2] மூல மந்திரம்:  ஓம் - மாம் - மகேஷ்வர்யை - நம :


[3] காயத்ரி: ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்

Tuesday, October 8, 2013

திருப்பதி புறப்பட்டது ஆண்டாள் சூடிய மாலை

ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் கருடசேவையன்று, பெருமாளுக்கு சார்த்துவதற்கு, ஆண்டாள் சூடி களைந்த மாலை, நேற்று, ஸ்ரீவில்லித்தூரிலிருந்து சென்றது. 

திருவில்லிபுத்தூர் வடபத்ரசாயிக்கு, ஆண்டாள் சூடிய மாலை, தினமும் சார்த்தப்படுகிறது. இதேபோல், ஆண்டுதோறும், மதுரை சித்திரை திருவிழாவில், வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கும், ஸ்ரீரங்கத்தில், சித்திரை ரேவதி தேரோட்டத்தின் போது, ரங்கநாதருக்கும், ஆண்டாள் சூடிய மாலை சார்த்தப்படுகிறது. 


மேலும், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்சவத்தின், ஐந்தாம் நாளான நாளை புதன்கிழமை 09-10-2013 அன்று மாலையில் நடக்கும் கருட சேவையில், ஆண்டாள் சூடி களைந்த மாலை பெருமாளுக்கு சார்த்தப்படும். 

இந்த ஆண்டு பிரம்மோற்சவத்திற்கு, மாலை அனுப்பும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. காலையில் ஆண்டாளுக்கு பெரிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியன சார்த்தப்பட்டு, சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடந்தன. பின், மாடவீதி, கந்தாடை வீதி வழியாக, ஆண்டாள் சூடிய மாலையையும், கிளியையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். 


அவற்றை, கோயில் ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் ஊழியர்கள், திருப்பதிக்கு கொண்டு சென்றனர்.

ஐப்பசி மாத ஆன்மீக ஜோதிட குறிப்புகள்


நவராத்திரி வழிபாட்டு முறை நான்காம் நாள் - தொடர் 5

நவராத்திரி வழிபாட்டு முறை - நான்காம் நாள்



அம்பாள்    வைஷ்ணவி


உருவ அமைப்பு    சங்கு சக்கரம் கதை வைத்திருப்பவள், தீயவற்றை அழிப்பவள். வாகனம்: கருடன் (சிலர் காக்கை என்றும் கூறுவர்)


குணம்    சௌம்யம்


சிறப்பு    ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சம்


நெய்வேத்யம்    எலுமிச்சை சாதம், பானகம்


பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 10.30 - 12.00, மாலை 6 – 7.30


மலர்    மல்லிகை


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    9 அல்லது 11


பாட வேண்டிய ராகம்    காம்போதி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    பூசம், அனுஷம், உத்திரட்டாதி


திசை புத்தி நடப்பவர்கள்    செவ்வாய் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் செவ்வாய் அல்லது சனி இருப்பவர்கள்


விசேஷம்        மங்களகாரியங்கள் நம் வீட்டில் எந்த விதமான தடங்கலும் இன்றி நடைபெற இன்று விரதம் இருத்தல் நன்று


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ
       அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
       நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சமோ
       மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே


[2] மூல மந்திரம்:  ஓம் - ஹ்ரீம் - யம் - வம் -வைஷ்ணவ்யை - நம :


[3] காயத்ரி: ஒம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி த்ன்னோ வைஷ்ணவீ ப்ரசோத்யாத் !!