Saturday, August 23, 2014

இன்று மாஸ சிவராத்திரி

இன்று மாஸ சிவராத்திரி

இன்று ஆவணி மாத சிவராத்திரி. மிக அபூர்வமான நாள் என்று கூட சொல்லலாம்.







இன்றைய கிரகநிலைப்படி ஆத்மகாரகன் சூரியன் ஆட்சியாகவும், மனோகாரகன் சந்திரன் ஆட்சியாகவும், தொழில்-ஆயுள்காரகன் சனி உச்சமாகவும், அனைத்து விதமான நலன்களையும் அள்ளித்தரும் குரு உச்சநிலையிலும் இருக்கிறார்கள்.

மேலும் இன்று சனிக்கிழமை பூசம் நக்ஷத்ரம், மிகவும் சக்தி வாய்ந்த நாள். ஜெனன கால ஜாதகத்தில் யாருக்கெல்லாம் சூரியன், சந்திரன், குரு, சனி சரியில்லாத நிலையில் இருக்கிறார்களோ அவர்கள் இன்றைய சிவராத்திரி நாளில் விரதம் இருந்து நாளை காலை சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து சிவதரிசனம் செய்தால் பூர்வ பாவம் விலகும். மனநிலை அலைபாயும் மனிதர்களுக்கு மனம் ஒருமுகப்படும். தொழில் ஓங்கும். சந்தாண பாக்யம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கும்.

இன்று பூசம் நக்ஷத்ரகாரர்களுக்கு(கணவனோ அல்லது மனைவியோ) குழந்தைகள் ஜெனிக்குமானால் அவர்கள் தீர்க்காயுளுடன் வாழ்வார்கள்.

சொல்ல வேண்டிய மந்திரங்கள்: 

[1] வாமதேவாய நமோ ஜ்யேஷ்டாய நம: ஸ்ரேஷ்டாய நமோ ருத்ராய நம: காலாய நம: கலவிகரணாய நமோ பலவிகரணாய நமோ பலாய நமோ பலப்ரமதனாய நமஸ் - ஸர்வ - பூததமனாய நமோ மனோன்மனாய நம:

[2] ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்!


[3] மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
    சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
    தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு 
    செந்துவர் வாயுமை பங்கன் றிருவால வாயான் றிருநீறே

    வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் நதீர்ப்பது நீறு
    போதந் தருவது நீறு புன்மை தவிர்பது நீறு
    ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
    சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் றிருநீறே




[4] 

சிவபுராணம் - 
வெண்பா

தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே-எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எம்கோன்
திருவாசகம் என்னும் தேன்.


நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க! 5

வேகம் கொடுத்துஆண்ட வேந்தன் அடிவெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க!
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க!
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க! 10

ஈசன் அடிபோற்றி! எந்தை அடிபோற்றி!
தேசன் அடிபோற்றி! சிவன்சே வடிபோற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி!
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி!
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி! 15

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி!
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன்அரு ளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 20

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழில்ஆர் கழல்இறைஞ்சி,
விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்இறந்து எல்லை இலாதானே! நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்! 25

புல்ஆகிப் பூடாகிப் புழுவாய் மரம்ஆகிப்
பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்!
மெய்யேஉன் பொன் அடிகள் கண்டின்று வீடுற்றேன்;
உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள்
ஐயா! என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே! 35

வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா!
பொய்யாயின எல்லாம் போய்அகல வந்தருளி,
மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே! 40

ஆக்கம் அளவிஇறுதி இல்லாய்! அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்!
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய்! சேயாய் நணியானே!
மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே! 45

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான்! வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்துஎங்கும் புழுஅழுக்கு மூடி
மலம்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மங்கலப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய 55

விலங்கும் மனத்தால் விமலா! உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்துஉள் உருகும்
நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயாஆன தத்துவனே!
மாசஅற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!
தேசனே! தேன்ஆர் அமுதே! சிவபுரனே!
பாசமாம் பற்றுஅறுத்துப் பாரிக்கும் ஆரியனே!
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சகம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே!
ஆரா அமுதே! அளவுஇலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே, உள்ளானே! 70

அன்பருக்கு அன்பனே! யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே, துன்இருளே! தோன்றாப் பெருமையனே!
ஆதியனே! அந்தம் நடுவாகி அல்லானே!
ஈர்த்துஎன்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தம்கருத்தின் 75

நோக்கரிய நோக்கே! நுணுக்கரிய நுண்ணுணர்வே!
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே!
காக்கும்எம் காவலனே! காண்பரிய பேரொளியே!
ஆற்றுஇன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய் நின்ற
தோற்றச் சுடர்ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள்
ஊற்றான உண்ஆர் அமுதே, உடையானே!
வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
ஆற்றேன் எம்ஐயா! அரனே! ஓ என்றென்று 85

போற்றிப் புகழ்ந்து இருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாரமே,
கள்ளப் புலக்குரம்பைக் கட்டுஅழிக்க வல்லனே!
நள்இருளில் நட்டம் பயின்றுஆடும் நாதனே!
தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே! 90

அல்லல் பிறவி அறுப்பானே! ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள்உணர்ந்து சொல்லுவார்,
செல்வர் சிவபுரத்தின் உள்ளார்; சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

No comments: