Thursday, December 6, 2012

திருப்பதி திருமலையில் சொர்க்க வாசல் 2 நாள் திறந்திருக்கும்

திருமலையில் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படும் சொர்க்கவாசல் 2 நாள்களுக்கு திறந்திருக்கும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.



திருமலை அன்னமய்யபவனில் புதன்கிழமை நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடுகள் குறித்த தேவஸ்தான குழுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வைகுண்ட ஏகாதசி தினத்தன்று காலை 5 மணி வரை மட்டுமே வி.ஐ.பிக்கள் வழிபட அனுமதி வழங்கப்படும். வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி நாளுக்கான 300 ரூபாய் விரைவு தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் டிசம்பர் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் திருப்பதி இ-தர்ஷன் கவுன்ட்டர்களில் வழங்கப்படும். வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி தினத்தில் திருமலையில் 300 ரூபாய் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது. 

வைகுண்ட ஏகாதசி தினத்தில் 15,000 டிக்கெட்களும், துவாதசி தினத்தில் 10,000 தரிசன டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். வைகுண்ட ஏகாதசி தினத்தன்று திறக்கப்படும் சொர்க்கவாசல் 2 நாள்களுக்கு திறந்திருக்கும். அன்றைய தினங்களில் ஆர்ஜித சேவைகள் மற்றும் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள், கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர் தரிசனங்கள் ரத்து செய்யபடுகின்றன.

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி டிசம்பர் 18-ஆம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனமும், 23-ஆம் தேதி காலை தங்கரதமும், 24-ஆம் தேதி அதிகாலை சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும் நடைபெறும் என்றார்.

No comments: