Wednesday, February 22, 2012

துலாம்: மார்ச் 1 - 15 ராசி பலன்கள்

துலாம்: (சித்திரை 3, 4, ஸ்வாதி, விசாகம் 1, 2, 3) யாரையும் எளிதில் நம்பிவிடாமல் ஆராய்ந்து பேசும் துலாம் ராசி வாசகர்களே, ராசியில் சனி, இரண்டாமிடத்தில் ராகு, ஐந்தாமிடத்தில் சூரியன், ஆறாமிடத்தில் புதன், ஏழாமிடத்தில் சந்திரன், குரு, ராசியாதிபதி சுக்கிரன், எட்டாமிடத்தில் கேது, லாபஸ்தானமான பதினொன்றில் செவ்வாய் என கோள்கள் நிலவுகின்றனர். 12ம் தியதி பாக்கிய விரையஸ்தானாதிபதி புதன் கும்பத்திற்கும், 14ம் தியதி லாபாதிபதி சூரியன் மீனத்திற்கும் பெயர்ச்சி ஆகின்றனர்.

மூன்று ஆறுக்கு உடைய துர்ஸ்தானாதிபதி குருவின் பார்வை ராசியில் ஏற்படுகிறது. எனினும் சுகஸ்தானாதிபதி ராசியில் இருப்பதாலும் ராசியாதிபதி சுக்கிரன் ஏழில் இருப்பதாலும் வரவுக்கு ஏற்றவாறு செலவுகளும் தேடி வரும். ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படலாம்.  தனாதிபதி செவ்வாய் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் லாபத்திற்கு பஞ்சமிருக்காது. எதிர்பார்த்திருந்த பண வரவுகள் தேடி வந்தடையும். ராகு கேதுவின் நிலையால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனத்தாங்கல்கள் ஏற்படலாம்.

மூன்றாம் வீட்டிற்குடையவர் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் உள்ளத்தில் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும். சகோதர சகோதரிகளுக்கு திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் கை கூடி வரும். மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும். பிள்ளைகளுக்காக செலவுகள் செய்ய வேண்டி வரும். வீடு, நிலம் வாங்குவதில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சென்ற நாட்களில் நடைபெறாத சில காரியங்கள் முக்கியஸ்தர்கள் மூலமாக இனிதே நிறைவேறும்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நண்பர்களோடு சேர்ந்து கூட்டுத் தொழில் செய்வீர்கள்.

கலைத்துறையினருக்கு சில வாய்ப்புகள் தவறக் கூடும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய தொல்லைகள் வரலாம். மாணவர்களுக்கு கல்வியில் மிகுந்த கவனம் தேவை.

சந்திராஷ்டம் தினங்கள்: மார்ச் 01

பரிகாரம்: திருமகளை ஆராதியுங்கள். முன்னோர்களை தினமும் வழிபடுங்கள்.

No comments: