Monday, April 8, 2013

விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 02

வெற்றிகளைக் குவித்து நினைத்தது நடந்து இனிக்கும் விஜய வருஷம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறக்கிறது. பிறக்கப் போகும் புத்தாண்டில் செல்வங்கள் சேரவும், சிறப்புடன் வாழ்ந்து மகிழ்ச்சியான தருணங்களை எதிர்கொள்ளவும், இயற்கை அன்னை சீற்றம் எதுவும் கொள்ளாமல் இருக்கவும், நலமும், வளமும் நாட்டில் மேலோங்கவும், புத்தாண்டின் தொடக்க நாளில் ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாட்டை மேற்கொள்வது அவசியமாகும். வரப்போகும் விஜய வருடம் சூரியனின் நக்ஷத்திரமான கார்த்திகையில் பிறப்பதால் மண்ணில் வாழும் மக்களுக்கெல்லாம் அரசாங்கம் மூலம் நன்மைகள் பல பெருகும்.

நிகழும் மங்களகரமான விஜய வருஷம், உத்தராயனம் வஸந்த ரிது சித்திரை மாதம் 1ம்தேதி (14.04.2013) ஞாயிற்றுகிழமையன்று கார்த்திகை நக்ஷத்திரம் ரிஷப ராசி தனுசு லக்னத்தில் புதுவருஷம் பிறக்கிறது. புத்தாண்டின் கிரக நிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் 9 கிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் சந்தோஷத்தை அதிகமாக அள்ளித்தரும் வகையில் இருப்பது சிறப்பம்சமாகும். ஆண்டின் தொடக்கத்தில் பூர்வபுண்ணிய விரையஸ்தானாதிபதி செவ்வாய் ஆட்சியாகவும், அஷ்டமாதிபதி சந்திரன் ஆறாமிடமிடத்தில் உச்சமாகவும், தனதைரியாதிபதி சனி லாபஸ்தானத்தில் உச்சமாகவும் இருக்கிறார்கள். மேலும் குரு தனஸ்தானத்தையும், தொழிற்ஸ்தானத்தையும், விரையஸ்தானத்தையும் பார்க்கிறார். நாட்டிலும் வீட்டிலும் பல நல்ல நிகழ்ச்சிகளை நடக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் வளரும். மக்களின் கவலைகள் தீரப் போகிறது. ராணுவம் பலமுள்ளதாக மாறும். புதிய புதிய ஆயுதங்களும், படைகளும் பெருகும். பொருளாதாரம் உயரும். ஆத்மகாரகனான சூரியன் நக்ஷத்திரத்தில் புத்தாண்டு பிறப்பதால் ஆன்மா மாற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். லோகமாகவும் லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பவனுமாகிய சிவனின் புதல்வனுமாகிய ஸ்ரீசுப்பிரமணிய கார்த்திகேயனின் நக்ஷத்திரத்தில்  இந்த ஆண்டு பிறக்கிறது. முருகனின் அருள் கடாக்ஷம் வருடம் முழுவதும் மக்களுக்குக் கிடைக்கும்.

இந்த ஆண்டு நவநாயகர்கள்:
ராஜா - குரு, மந்திரி - சனி, அர்க்காதிபதி - சனி, மேகாதிபதி சனி, ஸஸ்யாதிபதி - செவ்வாய், சேனாதிபதி - சனி, ரஸாதிபதி - குரு, தான்யாதிபதி - சந்திரன், நீரஸாதிபதி - செவ்வாய், பசுநாயகர் - கோபாலர்.

ஜெகத் உலக ஜாதக விஷயம்:
புத்தாண்டு ஜென்ம நக்ஷத்ரம் - கிருத்திகை 4ம் பாதம், ரிஷப ராசி. ஜென்ம லக்னம் - தனுசு. வர்கோத்திர யோகம், சஷ்டாஷ்டக தோஷம், குரு சந்திர யோகம், கெஜகேசரி யோகம் ஆகியன. தேவதை - அக்னி. பஞ்சபக்ஷி - வல்லூறு. சங்கிராந்தி புருஷர் - கரஜீ, ஆண் யானை வாகனம். நல்ல மழை வருஷிக்கும். திசை இருப்பு: சூரியன் - 00 வருஷம் - 10 மாதம் - 11 நாட்கள் - சூர்ய திசை - செவ்வாய் புக்தி - புதன் அந்தரம் நடக்கிறது.

நவநாயகர் பாதசாரம்:
சூரியன் - அஸ்பதி - 1
சந்திரன் - கிருத்திகை - 4
செவ்வாய் - அசுபதி - 1
புதன் - உத்திரட்டாதி - 4
குரு - ரோகினி - 4
சுக்கிரன் - அசுபதி - 1
சனி - ஸ்வாதி - 2
ராகு - விசாகம் - 1
கேது - பரணி - 3


ஆதாய விரைய விபரங்கள்:
விரையம் - 56, ஆதாயம் - 53. ஆதாயத்தை விட விரையம் அதிகம். இதன் பலன்: அரசாங்கத்திற்கு வருவாய் குறைந்து பல புதிய வரிகளை விதிக்கும். விலைவாசி கடுமையாக உயரும். மக்கள் பாதிக்கப்படுவார்கள். மழை அதிகமாக வருஷிக்கும்.

பொது பலன்கள்:
பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமைஎழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும்.  விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் கடன் வாங்குவதும் மேலுள்ளவர்கள் கொடுத்து அதற்கேற்றார் போல் வட்டி வசூலித்தலும் நடைபெறும். இடி மின்னல் அதிகம். சூறாவளி காற்றுடன் அதிக மழை ஏற்படும்.  இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். புராதன ஆலயங்கள் மற்றும் கட்டிடங்களில் சேதமும் நஷ்டமும் உண்டாகும். அதே வேலையில் புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். பல முக்கிய வழக்குகளுக்கு இந்த ஆண்டு எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும். விமான போக்குவரத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். பூச்சி மற்றும் கொசுக்கள் பிரச்சனைகள் தீரும். அரபிக்கடலில் சத்தமும் நிலநடுக்கமும் உண்டாகும். ராக்ஷஸ அலைகள் உண்டாகும். மாலத்தீவு கடுமையாக பாதிக்கப்படும். இந்தோனேஷியா, ஜப்பான், இலங்கை, அந்தமான், ஒடிஸா, ஆந்திரா போன்ற ஊர்களுக்கு கடுமையான புயல் பாதிப்புகள் உண்டாகும். ராணுவம் தங்களது வியூகங்களை அடிக்கடி மாற்றும். அந்திய தேசத்திலிருந்து நமது நாட்டிற்கு  மறைமுக இன்னல்கள் வரும்.  வரும் ஆண்டில் வாகனம், கப்பல், விமானம், ரயில் போன்றவைகளில் விபத்துக்கள் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. குண்டுவெடிப்பு, அக்னி அபாயங்கள் ஏற்படலாம். இந்தியாவில் ஜாதி, மதம் வெறிச் சண்டைகள், கலகங்கள் ஏற்படலாம். தீவிரவாதங்களை ஒடுக்க, கட்டுபடுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய சட்ட திட்டங்களை உருவாக்கும். அரசுகளுக்குள் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். தமிழகம் எதிர்பார்த்தபடி இவ்வாண்டில் மழை பொழியும். முக்கியமான வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டு மறையும். பசுமையான வனப்பகுதிகளாக மாறும். ராகு கேதுவால் நாட்டில் பக்தி பெருக்கமும் ஆலயங்களில் கூட்டம் அதிகரிப்பும் காணப்படும். ஆலய நிர்வாகம் வருமானப் பெருக்கத்திற்கான வழிமுறைகளை கொண்டு வரலாம். தியானம், யோகா, வேள்விகளுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். உணவு தானியங்கள், காய், கனிகளின் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாதபடி இருக்கும். மண்ணென்ணைய், டீசல், பெட்ரோல், கேஸ், எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்ந்தாலும் தட்டுப்பாடு ஏற்படும். மக்களுக்கு இதற்கான தேவை அதிகரிக்கும். தங்கம் வெள்ளி விலை ஏற்றமடையும். விவசாயம் செழிக்கும். மகசூல்  அதிகரிக்கும். விவசாயிகளின் வாழ்வில் பிரகாசம் ஏற்படும். அரசியலில் உள்ளவர்களுக்கு இவ்வாண்டு சத்தியசோதனையாக அமையும். தொழிலதிபர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே நல்லுறவும், சலுகைத் திட்டத்தால் பயன்களும் அடைவார்கள். கலைத்துறையினருக்கு புதுவருடம் சம்பாத்தியம், புகழ், பெருமை ஏற்படும். புதுமுகங்களின் வரவு அதிகமாகும். கலைத்துறையினர் சிலருக்கு அரசியலில் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி அதிகமாகவும், சாதனைகள் புரியவும் செய்வார்கள். நமது நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குச் சென்று அந்நிய செலாவனி அதிகமாகும். சனியுடன் ராகு இணைவதால் மத்திய அரசில் குழப்ப நிலைமையும் பல புதிய மாற்றம் ஏற்படுதலும் நிகழும். தவறு செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவர். பொன் பொருள் பித்தளை போன்ற உலோகங்கள் விலை கடுமையாக உயரும். நாட்டின் பாதுகாப்பு உயர்த்த வேண்டி வரும். பாலைவனத்தில் உஷ்ணம் அதிகரிக்கும். கடல் அவ்வப்போது உள்வாங்குவதும் நீண்ட காலம் நிசப்தமாகவும் இருக்கும். பேப்பர், முடி, விவசாயம் சம்பந்தப்பட்ட பொருட்கள் பற்றாக்குறையாக இருக்கும். அயல்நாட்டு வியாபாரம் செழிக்கும். தென்மாநிலங்களில் அவ்வப்போது கலவரங்கள் வந்து வந்து செல்வதும், அதனை அரசு அடக்குதலும் நடக்கும். ஏரி குளம் அணைகள் போன்றவை நிரம்பி வழியும். கடுமையான உஷ்ணத்தால் மக்கள் பாதிக்கப்படுவர். யாத்ரீகர்களுக்கு மிகுந்த நற்காலமாக இருக்கும். புண்ணிய க்ஷேத்திரங்களில் கர்ம காரியங்கள் தொய்வின்றி நடைபெறும். வாசனை திரவியங்கள் அதிக அளவில் விற்பனையாகும். அறிவியல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் மைல்கல்லை எட்டும். புதிது புதிதாக மக்களுக்குப் பயன்படும் பொருட்களை வியாபாரிகள் அறிமுகம் செய்வார்கள். வீண் வதந்தி செய்வோர், மக்களுக்கு குந்தகம் விளைவிப்போர் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.

இந்த ஆண்டு ஏற்படும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்:
மே மாதம் 28ம் தேதி  வாக்கியப் பஞ்சாங்கப்படி - குரு பகவான் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
ஜூலை 6ம் தேதி - வாக்கியப் பஞ்சங்கப்படி - சனி பகவான் வக்கிரம் நிவர்த்தி ஆகிறார்.

No comments: