Tuesday, June 26, 2012

ஐந்தாம் வீடு பாகம் மூன்று

ஐந்தாம் வீட்டில் கிரகங்கள்: பொதுப்பலன்

இனி ஐந்தாம் வீட்டில் இருக்கிற கிரகங்களால் என்ன செய்ய முடியும் என்கிற பொதுப் பலன்களைச் சுருக்கமாக பார்ப்போம்.

சூரியன் 5ல் இருந்தால்: புத்திரதோஷம் ஏற்படும். திரவிய லாபம், மலைப் பிரதேசம் பயணம். வயிற்று உபாதை ஏற்படலாம்.

சந்திரன் 5ல் இருந்தால்: நலங்களைப் பொழிவார். உயர்நிலைக்கு கொண்டு வருவார். அறிவாற்றலை அளிப்பார்.

செவ்வாய்: இவர் 5ல் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால் புத்திரதோஷம் இருக்காது. இவர் லக்னாதிபதியாகி 5ல் இருந்தாலும் தோஷம் உண்டாகாது. மற்ற நிலையில் உள்ள இவர், இந்த இடத்திற்கு ஊறு விளைவிப்பார். பகைவரால் தொல்லை, வயிற்று வலி உண்டாகும்.

புதன்: 5ல் பலமாக இருந்தால் அமைச்சர் ஆவார். உயர்நிலைக்கு உத்திரவாதம். மாபெரும் கவிஞராவார். மதிப்பு உயரும். மந்திரசித்தி ஏற்படும்.

குரு: அறிவு, ஆற்றல், பதவி எல்லாம் ஏற்படும். புத்திர தோஷம் ஏற்படலாம். சுப சேர்க்கை ஏற்பட்டால் சுபபலம் ஏற்படும்.

சுக்ரன்: பணம் சேரும், சுகம், சுபிட்சம் கிடைக்கும். அறிவு, திறமை எல்ல இடங்களிலும் வெளிப்படும். ‘பிஸிணஸ்’ செய்யும் தகுதி உண்டாகும். அமைச்சர்கள் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களுடன் நல்லுறவுகிட்டும்.

சனி: புத்திரதோஷம் உண்டாக்குவார். பகைவரால் துன்பம் நேரிடலாம். குறுக்கு வழியில் புத்தி போகும். சனி உச்சத்திலோ ஆட்சியிலோ சுயசாரத்திலோ இருந்தால் நன்மைகள் ஏற்படும்.

ராகு: மூக்கால் பேசும் தன்மை ஏற்படலாம். படிப்பு, அறிவுக்கு வளர்ச்சி ஏற்படுத்துவார். புத்திரதோஷம். மனகிலேசம் ஏற்படும். ஆனால் அதிர்ஷ்டமும் உண்டாகும்.

கேது: இவர் 5ல் இருந்தால் தொல்லைகள் ஏற்படலாம். படிப்பு, அறிவு இவற்றில் வளர்ச்சிகள் உண்டு. புத்திரபாவத்தை குறப்பார். மன சஞ்சலம் நிறைந்திருக்கும்.

கிரக சேர்க்கை-பார்வை தரும் பலன்:
இந்த வீட்டின் வேறு சில விஷாதிகளைப் பார்ப்போம்.

தன வாக்கு குடும்ப ஸ்தானமான 2ம் பாவத்திற்கு இது 4ம் பாவமாகிறது. சுகஸ்தானமாகிய 4ம் பாவத்திற்கு 2ம் பாவமாகிறது. ஆயுள்ஸ்தானமாகிய 8ம் பாவத்திற்கு இது 10ம் பாவமாகிறது. களத்திர ஸ்தானமாகிய 7ம் வீட்டிற்கு 11, முன்னமயே சொல்லப்பட்டபடி 9ம் பாவத்திற்கு 9ம், லாபஸ்தானமாகிய 11க்கு நேர் 7ம் வீடும் ஆகிறது. மேற்சொன்னவை யாவுமே விசேஷமான தனித்தன்மை கொண்டவை.

நமது ஜாதகத்தில் தனஸ்தானாதிபதியும் 5ம் பாதிபதியும் ஒன்று சேர்ந்தால் நன்மை பயக்கும். 4, 5 பாவாதிபதிகள் ஒன்று கூடினால் யோகம் நல்லது.  7,5 பாவாதிபதிகள் கூடுவதும் சிறப்பானது. 5,9ம் அதிபதிகள் சேர்க்கை மகா பாக்கியமாகும். 5, 11 பாவாதிபதிகள் பார்வை மிகவும் நல்லது. சேர்க்கையாலும் நலமுண்டாகும். சேர்கிற இந்த கிரஹங்கள் அல்லது பார்த்து கொள்ளுகிற கிரஹங்கள் நண்பர்களாக இருந்தால் நலம் கூடும்.

5ம் அதிபதி 8ம் அதிபதியுடன் கூடினால் சங்கடங்கள் நேரிடலாம். 12ம் வீட்டோனுடன் கூடினால் பாக்கியங்கள் விரையமாகும். ஆறாம் வீட்டோனுடன் கூடினால் பகைவரால் பாக்கியம் போகும். சுபபலமுள்ள 3ம் வீட்டோனுடன் கூடினால் சகோதர பாக்கியத்தை அளிப்பான். ஐந்தாம் வீட்டோன் சுக்ரனாக இருந்து பலம் பெற்றால் பணம் சம்பந்தப்பட்ட துறைகளில் லாபம் உண்டு. செவ்வாயாக இருந்து பலம் பெற்றால் பூமி, வாகனம் சம்பந்தப்பட்டது மூலம் பணம் கிடைக்கும். சகோதரராலும் நன்மை உண்டு. குருவாக இருந்தால் பலம் பெற்றால் அரசினால் பணம், புகழ் எல்லாம் கிடைக்கும். சூரியனால் தந்தை மூலமும் சந்திரனால் தாய் மூலமும் பொருள் லாபம் கிடைக்கும்.

அதாவது அந்த வீட்டுக்குரியவர் யாரோ அந்தக் கிரஹத்தின் காரகத்துவங்கள் மூலம் நலம் சேரும். இதற்கு அந்த அந்த கிரஹம் பலம் பெற்றிருக்க வேண்டும்.

இனி லக்னமும் ஐந்தாம் வீட்டோனும் பார்ப்போமா?


தொடரும்.

No comments: