Tuesday, November 6, 2012

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோவிலில் கந்தசஷ்டி திருவிழா 13–ந் தேதி தொடக்கம்

கந்தசஷ்டி திருவிழா 13–ந் தேதி தொடக்கம்

பின்னால் உயர்ந்து  தெரிவது முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தில் பதியின் ராஜகோபுரம்

கந்தசஷ்டி திருவிழா

தமிழ் கடவுள் முருக பெருமானின் 2–ம் படை வீடாக திருச்செந்தூர் திகழ்கிறது. இங்கு முருக பெருமான் சுப்பிரமணிய சுவாமியாக காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழாவும் ஒன்றாகும்.
இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா வருகிற 13–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 19–ந் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது. கந்தசஷ்டி திருநாள் மற்றும் திருக்கல்யாணம், நடைதிறப்பு, பூஜை கால விவரம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:–

13–ந் தேதி தொடக்கம்

13–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கந்தசஷ்டி முதல் நாள் அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்கு பின் மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.
14–ந் தேதி முதல் 17–ந் தேதி வரை கந்தசஷ்டி 2–ம் நாள் முதல் 5–ம் நாள் வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்கு பின் மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

கந்தசஷ்டி

கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான 18–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 6–ம் நாள் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை நடக்கிறது. மாலை 4.20 மணி அளவில் சுவாமி எழுந்தருள்கிறார். மாலை 5.30 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடைபெறும்.

திருச்செந்திலதிபன் பதியில் கந்தசஷ்டியின் போது சூரனை வதம் செய்ய முருகன் தயாராகும் காட்சி | கடல்வெளியில் நெகிழ்ச்சியுடன் மக்கள் கடல் (பழைய படம்)

திருக்கல்யாணம்

19–ந் தேதி (திங்கட்கிழமை) 7–ம் நாள் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
முன்னதாக அதிகாலை 5 மணி அளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுகிறார். மாலை 4.35 மணிக்கு மேல் சுவாமி மாலை மாற்று விழாவுக்கு புறப்படுகிறார். இரவு திருக்கல்யாணம் நடைபெறும். விழாவை முன்னிட்டு கோவில் கலையரங்கில் காலை, மாலை சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது. இந்த தகவலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் அர.சுதர்சன் தெரிவித்து உள்ளார்.

No comments: